Friday, August 17, 2018

அகத்தியர் வரலாறு!!


அகத்தியர் வரலாறு!!
பெயர் : அகத்தியர் (அ) அகஸ்தியர் (அ) குடமுனி (அ) கும்பயோகி (அ) கும்பமுனி (அ) பொதிகைமுனி
பிறந்த மாதம் : மார்கழி
பிறந்த நட்சத்திரம் : ஆயில்யம்
குரு : சிவன்
சீடர்கள் : போகர், மச்சமுனி
மனைவி : லோப முத்திரை (விதர்ப நாட்டு மன்னனின் மகள்)
மகன் : இத்மலாகன் (அ) சங்கரன்
சமாதி : அனந்தசயனம் (திருவனந்தபுரம்), கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவில் என்றும் கூறுவார்.
வாழ்நாள் : 4 யுகம் 48 நாட்கள்
தமிழ் தந்த அகத்தியர்….
தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர். இவர் பொதிகையில் தவம் செய்ததால் “பொதிகைமுனி” என்றும், கும்பத்தில் பாய்ந்ததால் “கும்பமுனி” என்றும், அகத்தினுள்ளே ஈசனைக் கண்டதால் ‘அகத்தியர்” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பற்றித் தமிழிலும், வடமொழியிலும் புராணக் கதைகள் பல உள்ளன. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் உள்ளன. இவர் முருகக் கடவுளின் ஆணைப்படி முத்தமிழுக்கு இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர். சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார்
வடக்கே இமயமலையும் தெற்கே பொதிகை மலையும் இவருக்கு ஒன்றே. தமிழும், மருத்துவமும், ஜோதிடமும், இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின.
பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர் தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.
தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரான இவர், பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் சரி, இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படும் அகத்தியர் குறித்து எண்ணற்ற செவிவழி கதைகளும் கூறப்படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
அகத்தியரின் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது.
இந்திரனின் சாபத்திற்கு ஆளாகிய ஊர்வசி பூலோகத்திற்கு வந்த சமயம் அவள் அழகில் மயங்கி மித்ரர் என்பவரும், வருணர் என்பவரும் காதல் வயப்பட்டனர். இதன் காரணமாக மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்து, சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றவர்.
கைலையில் நடந்த சிவபெருமான் – பார்வதி திருமணத்தின் போது, முப்பது முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகள் என பலரும் வருகையில், பாரம் தாங்காமல் பூமி சாய்ந்து வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அவ்வாறு செல்லும் பொழுது மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
ராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து, அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் ஆட்டுக் கறியாக சமைத்து விருந்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் எழுதிய நூல்கள்:
அகத்தியர் எழுதிய நூலகளின் பட்டியல்
அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
அகத்தியர் வெண்பா
அகத்தியர் வைத்தியக் கொம்மி
அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
அகத்தியர் வைத்தியம் 1500
அகத்தியர் வைத்திய சிந்தாமணி
அகத்தியர் கர்ப்பசூத்திரம்
அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
அகத்தியர் வைத்தியம் 4600
அகத்தியர் செந்தூரம் 300
அகத்தியர் மணி 4000
அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
அகத்தியர் பஸ்மம் 200
அகத்தியர் நாடி சாஸ்திரம்
அகத்தியர் பக்ஷணி
அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
சிவசாலம்
சக்தி சாலம்
சண்முக சாலம்
ஆறெழுத்தந்தாதி
காம வியாபகம்
விதி நூண் மூவகை காண்டம்
அகத்தியர் பூசாவிதி
அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியர் பெருமானின் பூசை முறை[தொகு]
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூற வேண்டும்.
தியானச் செய்யுள்:
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்
பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
சித்த வைத்திய சிகரமே போற்றி!
சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
இசைஞான ஜோதியே போற்றி!
உலோப முத்திரையின் பதியே போற்றி!
காவேரி தந்த கருணையே போற்றி!
அகத்தியம் தந்த அருளே போற்றி!
இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
நிவேதனம்:
இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
அகத்திய முனிவரின் பூசா பலன்கள்:
இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
கல்வித்தடை நீங்கும்.
புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
முன்வினை பாவங்கள் அகலும்.
பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
சகலவிதமான நோய்களும் தீரும்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
ஓம் ஸ்ரீஅகத்தியர் மந்திராலயம்
தொடர்புக்கு
KERALA MOB NO: +91 7356292616.
TAMIL NADU MOB NO: +91 9952230991

Tuesday, August 14, 2018

சித்தர்கள்


சித்தர்கள் :
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்[தொகு]
இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
தியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.
எண் பெருஞ் சித்திகள் அல்லது அட்டமா சித்திகள்
அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே
திருமூலர்--திருமந்திரம்-668வது பாடல்

எண் பெருஞ் சித்திகளை விளக்கம்
அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.[3]

இத்தகைய எண் பெருஞ் சித்திகளைச் எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர்.

சித்தர்கள் இயல்புகள்
சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்

சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
"சாதி,சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும்" சித்தர்கள் வாழ்ந்தனர். "விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி" ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும்,[சான்று தேவை] உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.

தமிழ் வளர்த்த சித்த நூல்கள்:
சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை படைத்துள்ளனர். தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல் நூல், தாவரயியல் நூல், சோதிட நூல், கணித நூல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன.
சொல்லிலக்கணம்[தொகு]
சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார்.

சித்தர்களின் கொள்கை
பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.

உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
உருவம் இல்லா உண்மை அவன்.
இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
தானும் அடைவார் அந்நிலை தன்னை
பிரிவுகள்[தொகு]
சித்தர்கள் தாங்கள் பின்பற்றிய கொள்கைகளைப் பொறுத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெறுகின்றனர். அவையாவன,.

சன்மார்க்கச் சித்தர்கள் - திருமூலர், போகர்.
ஞானச் சித்தர்கள் - பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகண்ணர், இடைக்காட்டுச் சித்தர்.
காயச் சித்தர்கள் - கோரக்கர், கருவூர்ச் சித்தர், மச்சமுனி, சட்டமுனி, சுந்தரானந்தர், உரோமரிஷி


சித்த வைத்தியம்
சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் அறிவியல்அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அவ்வைத்திய முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர். மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர். இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும்

மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் ஆகியவை உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.

"உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமே."

சித்தர்களின் இரசவாதம்
இரசவாதம் என்னும் சொல்லுக்கு இரசத்தை வேதித்தல் என பொருள். எளிய உலோகங்களுடன் சிலவகையான தாவர வகைகளைச் சேர்த்து தங்கம் தயார் செய்வது. இவற்றை சித்தர்கள் செய்தமைக்கு ஆதாரமான பாடல்கள் உண்டு. அதில் ஒன்றான திருமூலர் சொல்லும் செடியின் பெயர் பரிசனவேதி. அந்த பாடல்...

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே
இப்படி செய்து தங்கம் கிடைக்க வேண்டுமென்றால் தங்கத்தின் மீது ஆசை இருக்க கூடாது. இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது." [4] இன்றைய வேதியியல் அறிவின் படி இரும்பையோ அல்லது வேறு எந்த ஒரு தனிமத்தையோ பொன்னாக்க முடியாது. எனினும் அப்படிப்பட்ட முயற்சிகளே இன்றைய வேதியல் துறையின் முன்னோடி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபஸ்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனவே ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது என்று பொருள்.

சில சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி இறைப்பொருளுடன் ஒன்றுவதை ஒருவிதமான ரசவாதமாகப் பயின்றனர். இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்', 'இன்பரசவாதம்', என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள்.

போகர் என்ற சித்தர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை தமிழில் அமைந்தாலும், அவர் ஒரு சீனர் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது.

சித்தர்களின் நவீன அறிவியல் ஆராய்ச்சி
சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சித்தர்களின் ஞானம்
மதவாதிகள், ஆத்திகர்கள், அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற நம்பிக்கை உள்ளவர்கள். மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.[5]கற்பக மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர் நோயின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.
தமிழ்ச் சித்தர்கள்:
முதன்மைக் கட்டுரை: சித்தர்கள் பட்டியல்
சித்தர் மரபை நோக்குங்கால், இதுவரை கண்டுள்ள எண்ணிக்கை கட்டுக்கடங்காதது.சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.
தலையாய சித்தர்கள்:
1 திருமூலர் 2 இராமதேவ சித்தர் 3 அகத்தியர் 4 இடைக்காடர் 5 தன்வந்திரி 6 வால்மீகி
7 கமலமுனி 8 போகர் 9 மச்சமுனி 10 கொங்கணர் 11 பதஞ்சலி 12 நந்தி தேவர்
13 போதகுரு 14 பாம்பாட்டி சித்தர் 15 சட்டைமுனி 16 சுந்தரானந்தர் 17 குதம்பைச்சித்தர் 18 கோரக்கர்.
ஓம் ஸ்ரீஅகத்தியர் மந்திராலயம்
தொடர்புக்கு
KERALA MOB NO: +91 7356292616.
TAMIL NADU MOB NO: +91 9952230991

வீரபத்திரர்

வீரபத்திரர்: வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமான ை மருமகனாகக் கொண...